கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

முற்பகல் செய்யின்..

Filed under அ) கவிதைகள் by admin

குழந்தைகள் காப்பகம்
விட்டுச்சென்றவர் வசிப்பது
முதியோர் இல்லம்

oOo oOo oOo oOo oOo oOo oOo

அன்று…
கதை கேட்ட உன்னிடம்
கார்டூன் பார் என்றேன்
விளையாட அழைத்தபொழுதோ
வீடியோ கேம் கொடுத்தேன்
தாலாட்டு பாடென்றாய்
டீ.வி பார்த்து துயிலென்றேன்
கட்டி அணைத்தபொழுதும்
கணினியில் மூழ்கிக்கிடந்தேன்
விழிகசியக் காத்திருந்தாய்
வேலையே கதியென்றிருந்தேன்
காலங்கள் உருண்டோடின
இன்று
உதவட்டுமா என்று கேட்டேன்
உனக்கொன்றும் தெரியாதென்றாய்
எப்பொழுது வருவாயென்றேன்
எரிதம் போல் என்னைப் பார்த்தாய்
ஏதேனும் பேசுவாயோ
என நானும் ஏங்கிப் பார்த்தேன்
இயலாத எனக்குத் துணையாய்
இயந்திரங்கள் விட்டுச் சென்றாய்…

3 responses so far

மௌலியின் “ஃப்ளைட் 172″

Filed under ஊ) நான் ரசிப்பவை by admin

சமீபத்தில் தான் இந்த நகைச்சுவை நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வயிறு வலிக்கச் சிரித்தேன், வெகு காலத்திற்குப் பிறகு. மிகவும் அருமையான படைப்பு.

அதிலிருந்து சில காணொளிகள் இங்கே

1. நாதஸ்வரம் என்றால் என்ன? ஆங்கிலத்தில் விளக்குகிறார் மௌலி

2. தவில் – இதை மௌலி ஆங்கிலத்தில் விளக்கும் காட்சி

3. மௌலியின் ஆங்கில விளக்கதைக் கேட்டவரின் நிலை

One response so far

நினைவாஞ்சலி

Filed under அ) கவிதைகள் by admin

எனது அருமை அக்கா
எப்படி முடிந்தது உன்னால்
எமை விட்டுச் செல்ல
எப்படி முடிந்தது உன்னால்
தீபாவளித் திருநாள் இன்று
தீபா வலியென்றே உணர்ந்தேன்
அலைபேசி தனைக் கொண்டு
அனைவர்க்கும் வாழ்த்துரைத்தேன்
உன் எண்ணைக் கடக்குந்தோறும்
உள்ளமெல்லாம் பதறுதம்மா…
பொத்திப் பொத்தித் தாளாமல்
பொங்கி வரும் சோகத்தை
இத்தனை நாள் பேசாத
என் கவிதை சொல்லிடுமா?
மருதாணிச் சிவப்பை நீ
மகிழ்ந்தெனக்குக் காட்டும்முன்னே
காலன் கொண்டு சென்றானே
காலம் பார்த்து வந்தானோ?
நீ இல்லை எனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யோ
வலி சிக்கிய தொண்டை
விழுங்கிடுமா சோகத்தை?
கண்களில் திரளும் நீர்
கரைத்திடுமா காயத்தை??
நீங்காத உன் நினைவை
நெஞ்சமெங்கும் சுமந்திருந்தும்
நீயில்லாத வெற்றிடத்தை
நிரப்பும் வழி ஏதும் உண்டோ??

3 responses so far

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Filed under ஏ) இது நம்ம ஏரியா by admin

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

No responses yet

புத்தாண்டு இனியதாய் அமையட்டும்

Filed under ஏ) இது நம்ம ஏரியா by admin

அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

2 responses so far

கனவு

Filed under ஏ) இது நம்ம ஏரியா by admin

இமைத்திரையில்
மனம் ஓட்டும்
வண்ணக் குறும்படம்
கனவு

6 responses so far

குழந்தைகளின் விளையாட்டு

Filed under உ) அனுபவம் எழுதுது by admin

முன்னொருகாலத்தில்(??) எங்கண்ணன் வாரந்தவறாம நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய்வருவாரு.. ரொம்ப பக்தியெல்லாம் இல்லை..அங்க கொடுக்கிற வெண்பொங்கலை சாப்பிடத்தான். சுடச் சுடப் பொங்கல் கொடுப்பாங்க அதை வலது கையைக் குவிச்சு வாங்கி, அது கையிலிருந்து வழிஞ்சு ஓடாம இருக்க இடது கையை சப்போர்ட்டுக்கு கொடுத்து ம்ம் அது ஒரு தனிக் கலை..

அப்படித்தான் இன்னிக்கு நிவியும்(என் பொண்னு) ரெண்டு கையையும் குவிச்சு வச்சிருந்தது. உள்ளே பொங்கல் இல்லை கூழாங்கற்கள். மதியம் நிவியை விளையாட வெளிய கூட்டிட்டு போயிருந்தேன். போற வழியெல்லாம் கீழே கிடக்கும் கூழாங்கல்லை எடுத்து எடுத்து கையில குவிச்சி சேமிக்க ஆரம்பிச்சாச்சு.. கல் கீழே விழாம இருக்க அப்பப்போ சப்போர்ட் செய்தபடி. சமயத்துல ஒரு கல் கீழ விழும் அதை எடுக்கப்போக வேற ஒன்னு கீழ விழும்..சில சமயம் எல்லாமே சிதறிடும்.. ஆனாலும் சளைக்காம எடுத்து போட்டு அந்த ஒரு விளையாட்டு தொடர்ந்தது. என்ன விளையாட்டுன்னு எனக்கு புரியலை ஆனா நிவி ரொம்ப சந்தோஷமாவே விளையாடிட்டு இருந்தது.

யோசிச்சுப் பார்த்தா ஏதோ புரிஞ்சது.. குழந்தைங்க அவங்களுக்கான விளையாட்டை தானாவே உருவாக்கிடறாங்க. காற்றைத் துரத்திக்கிட்டு ஓடுறது, பொம்மைகளை தூங்க வைக்கிறது, வெற்று பாத்திரத்திலிருந்து உணவு அள்ளி உண்பது (நமக்கும்) ஊட்டுவது, வீடெங்கும் தண்ணீர் கோலம் போடுறது, எதையோ தேடுறது, பொருட்களை இடம் மாற்றி மாற்றி வைக்கிறது.. இப்படி நிறைய.

சொப்பு வச்சு விளையாடுறது பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். மண்சோறு சமைச்சு, தண்ணீர்க் குழம்பு வச்சு, குப்பைமேனி இலை அப்பளம் பொரிச்சு என் அக்கா பொண்ணு நந்து எனக்கு விருந்து பரிமாரினதை என்னால மறக்க முடியாது. உடம்புக்கு நல்லது, மூளை வளரும்னு சொல்லி என் வாயில் மண் அள்ளிக்கொட்டியதை என்னால தடுக்க முடியல. அழகான விளையாட்டு.

நான் சின்ன வயசுல விளையாடினதெல்லாம் நல்லா நினைவிருக்கு. கோவில் கட்டுவோம், அதுக்கு தவறாம முழு ஆண்டு லீவில் கும்பாபிஷேகம்(?) செய்வோம், கையால் நோட்டீஸ் எழுதி.. நன்கொடை(?) வாங்கி திருவிழா நடத்துவோம், கூழு ஊத்துவோம். கோவிலுக்கு வருடா வருடம் சுண்ணாம்பு பூசுவது கண்டிப்பா உண்டு.. யார் வீட்டிலாவது பொங்கலுக்கு அடித்தது மிச்சம் இருக்கும். சந்தோஷமான விஷயம் என்னன்னா கோவில் பூசைக்கு எல்லாரும் வருவாங்க. நிஜமான கோவில் போலவே தினமும் தீப வழிபாடும் உண்டு. இன்றும் அந்த கோவில் எங்க வீட்டு வாசலில் இருக்கு.

சமீபத்தில் ப்ளோரிடா டிஸ்னி வர்ல்டுக்கு போயிருந்தோம். அங்க நடந்த ஒரு ஸ்டேஜ் ஷோ பார்க்கவேண்டி கியூவில காத்திட்டிருந்தோம். கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு மேல காத்திருக்கவேண்டியிருந்தது… நிகழ்ச்சி நடக்கப்போறது என்னம்மோ 25 நிமிஷம்தான். இப்பலருந்தே கியூவில நிக்கலைனா அப்புறம் இந்த ஷோ பார்க்க முடியாதுன்னு பெரியவங்கல்லாம் காத்திருந்தாங்க, குட்டிப் பசங்களுக்கு அவ்வளவு பொறுமை இருக்குமா என்னா? ஒன்னொன்னும் இங்கயும் அங்கயும் ஓட ஆரம்பிச்சாச்சு, ஒரு அழுகைக் குரல் எழும்ப அங்கொன்றும் இங்கொன்றுமாய் அடுத்தடுத்து அழுகுரல்கள். ஒரு மாதிரியான இறுக்கமான சூழ்நிலை.

எங்களாலும் நிவியை தூக்கி வச்சிருந்து சமாளிக்க முடியலை, கொஞ்சம் நேரம் கீழே விட்டோம். நிவி கீழ இறங்கி அங்க மரத்துலருந்து விழுந்த இலைகளை எல்லாம் எடுத்து கையில சேகரிக்க ஆரம்பிச்சது. கொஞ்சம் சேர்ந்தததும் அங்க நின்னுட்டிருந்த பசங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் ஆளுக்கு ஒன்னா அவங்க கையில கொடுக்க ஆரம்பிச்சது. இது சிரிச்சிட்டே கொடுத்ததை பார்த்ததும் அவங்களும் புரியாம சிரிச்சிட்டே வாங்கிக்கிட்டாங்க. எல்லாருக்கும் கொடுத்ததும் கையில் இருக்கும் இலைகள் காலி உடனே நிவிக்கு வேற யோசனை வந்திருச்சி ஒருத்தர் கையில உள்ளதை வாங்கி இன்னொருத்தருக்கு கொடுக்க ஆரம்பிச்சது. என்ன விளையாட்டோ ஆனா பசங்களுக்கு பிடிச்சு போச்சு. சில பசங்க இலைகளை தேடி எடுத்து வச்சிக்கிட்டு நிவிக்காக காத்திருந்தாங்க. அங்க இருந்த எல்லாருமே இந்த விளையாட்டை இரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. பெரியவங்களும் விதிவிலக்கில்லை.. கொஞ்சம் நேரத்துல அது ஒரு செயின் ரியாக்ஷன் மாதிரி ஆயிருச்சு.. எல்லார் கையிலயும் ஓர் இலை…எல்லார் முகத்துலயும் ஒரு புன்னகை. இந்த விளையாட்டு ஒரு அரை மணி நேரம் நீடிச்சது. கொஞ்சம் நேரத்துலயே ஷோவுக்கான வாசலையும் திறந்துட்டாங்க காத்திருந்த அலுப்பே இல்லாம எல்லாரும் சந்தோஷமா நிகழ்ச்சியை இரசிக்கப் போனோம்.

எவ்வளவு பெரிய விஷயத்தையும் அலட்டிக்காம, ரொம்ப சாதாரணமா செய்து முடிச்சிடறாங்க குழந்தைங்க.. படிச்சு பெரியவங்களான நமக்குதான் தேவையில்லாத தயக்கம், பொறாமை,ஈகோ போன்ற சில்லியான நிறைய விஷயங்கள் இருக்குது. குழந்தைகள் கிட்ட இருந்து நிறையவே கத்துக்கவேண்டி இருக்கு.. அப்படி கத்துக்கலையின்னாலும் பரவாயில்லை அதுங்களையாவது இன்னும் கொஞ்சம் நாளைக்கு குழந்தைத்தனம் மாறாம சந்தோஷமா விளையாட விடுவோமே? எதுக்கு இப்பவே நாம சுமக்கிறதை அவங்களுக்குள திணிக்கப்பார்க்கணும்? வேண்டாமே.. பாவம் பசங்க விளையாடட்டும்.

(இது நான் 29-5-08 அன்று எழுதி வச்சது.. இன்னிக்குதான் மறுபடி படிச்சேன் … மனதுக்குள் அதே உணர்வுகள்..)

3 responses so far

அம்மா.. நிவிக்கு ஆப்பி பத்டே வந்துச்

Filed under ஏ) இது நம்ம ஏரியா by admin

இனிய இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிவிம்மா

3 responses so far

பதின் வயது

Filed under அ) கவிதைகள் by admin

இருட்டின் வெளிச்சத்தில்
தோன்றும் விண்மீனாய்
பதின் வயதுகளில்
பூப்பூக்கும் கனவுகள்
அழகான அலைகடலில்
ஆர்ப்பரிக்கும் பேரலையாய்
பருவச் சுரப்பி வசம்
அதிரடி ஆட்சிமாற்றம்
எதிர்பாராத் தாக்குதலால்
ஏதேதோ மாற்றங்கள்
அன்பான உறவுகளும்
அன்னியமாய்த் தெரிந்தன
அருகிருக்கும் எல்லோரும்
அறிவிலியாய்த் தோன்றினர்
அக்கறையின் அரவணைப்பும்
அணைக்கட்டாய் உறுத்தின
அறிவுரைகள் செவிகட்கே
அத்தியெனக் கசந்தன
புரிதலே இல்லையென்று
புலம்பிட வைத்தன
பெரிசுகள் தொல்லையென்று
போர்க்கொடி எழுப்பின
விரும்பின வாழ்க்கைத்தேடி
வெகுளியாய் உலகில் ஓடி
தாக்கின நிஜத்தின் வலியில்
தடைகளின் தடயம் புரிய..
அதைக் கடந்து போராடி
அனுபவத்தால் ஆளாக
நான் பட்ட இன்னல்கள்
நாள்தோறும் எனக்குச் சொல்லும்
பேருண்மை என்னவென்று
பெரியோர் சொல் வேதமென்று
………..
யான் பெற்ற துன்பங்கள்
நீ பெறவே வேண்டாமென்று
கற்று வந்த பாடங்களைக்
கனிவுடனே எடுத்துச் சொன்னால்
தலைமுறை இடைவெளியென
தள்ளியிருக்கச் சொன்னாய்
பதின் வயதென்றாலே
பட்டால்தான் புரியுமோ?

13 responses so far

திரையிசையில் கவிதை – வெண்மதி வெண்மதியே

Filed under ஊ) நான் ரசிப்பவை by admin

இந்தப் பாட்டுல அப்படி என்னதான் இருக்கு? எல்லோர் அடிமனசிலும் எப்போதும் இழையோடும் ஒருவிதமான சோகம் இந்த இசையில இருக்கே அதனாலயா? அழகான கவித்துவமான வரிகளா? என்னன்னு தெரியலை ஆனா எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

வாலியின் வரிகள்

ஜன்னலின் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உறசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே

அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதிலும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

One response so far

Older Entries »