வாழும் முறைமை எது?

அ) கவிதைகள்

விழி மூடித் திறக்கும் முன்னே
மூவிரண்டு வயதாம் உனக்கு
பட்டுப் பிள்ளை உன்னை – நான்
பாடாய்ப் படுத்துகின்றேன்
துள்ளி விளையாடும் போதில்
துயில் கொள்ளத் துரத்துகின்றேன்
பஞ்சு போல் உறங்கும் பொழுதோ
பள்ளி செல்ல எழுப்புகின்றேன்
மணியான உன்னைக் கிளப்ப
மணி காட்டிப் பணிகள் சொல்வேன்
உடைமாற்றி தலைசீவி உணவுண்டு
ஒரே நேரம் எத்தனைச் செய்வாய்?
பரபரப்பில் பாலைத் துறந்து
பறந்து போவாய் பேருந்துக்கு
பசிக்குமோ என்னவோ என்று
பரிதவித்துக் காத்துக் கிடப்பேன்..
மயில் போல ஆடுவாயோ
குயில் போல பாடுவாயோ – என
நித்தம் ஒரு கலை பயில
நெடுந்தூரம் அனுப்பு கின்றேன்
உனக்கும் எனக்குமேயான
நேரம்மிகச் சுருங்கிப் போக
உறையாதோ கொஞ்சும் நேரம்?
உள்ளுக்குள் உருகி நின்றேன்
என்னுடன் விளையாடென்று
ஏங்கி நீ கேட்கும் பொழுது
எனக்குமே ஏதோ தோன்றும்
எதற்கு இந்தப் பரபரப்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *