Oct062006
அதிகாலை அதிசயம்
Filed under அ) கவிதைகள் by admin
அடைமழை பொழிந்ததன் சுவடு
அழகாய் தெரிந்தது இங்கு
ஆங்காங்கே திட்டுத் திட்டாய்
அதிசயத் தடாகம் பட்டாய்
குருகுகளின் குளியல் அறையோ
அவையெந்தன் விழிகட்கு இரையோ
சொட்டிய துளிகளின் சப்தம்
செவிகளை தீண்டிடும் சொர்கம்
விழித்தது செங்கதிரோனோ
விடியலின் அழகிதுதானோ
தங்கமுலாம் பூசிய இலைகள்
வெள்ளிமணி சொட்டிடும் கிளைகள்
கோர்த்திடும் எண்ணம் கண்டு
தீண்டினேன் விரல்கள் கொண்டு
உருகின விரல்களின் வழியே
சிதறின மணிகளும் தனியே
விழிகளின் சொந்தம் அழகோ?
விரல்பட அழிந்தே விடுமோ?