அர்த்தங்கள் (21/11/02)

அ) கவிதைகள்

அன்பெனக்கு நீ அளிக்க
அதையே நான் உனக்களித்தால்
அதிலென்ன ஆனந்தம் உண்டு

நீ கொடுக்கா பொழுதினிலும்
நானுனக்கு தொடர்ந்தளித்தால்
அதுவே உண்மை அன்பென்பது

நலமாக நீ இருந்து
நலமா என்றென்னைக் கேட்டால்
அதிலென்ன ஆறுதல் இருக்கிறது

நலமற்று நீ இருந்தும்
நினைவாக என் நலனைக் கேட்டால்
அதுவன்றோ பிரியம் என்பது

இறந்து நீ சென்றபின்பு
உன் நினைவை பிறர் மறந்தால்
அதிலென்ன பெருமை இருக்கிறது

இறவாத உன் நினைவு
பிறர் மனதில் வீற்றிருந்தால்
அதுதானே வாழ்தல் என்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *