Dec182004
மனிதம் எங்கே?
Filed under அ) கவிதைகள் by கீதா
ஏதோ விவரங்கள் தேடி
ஏடுகள் புரட்டிக் கொண்டிருந்தேன்
சிக்கின புகைப்படம் இரண்டு
சிதைத்தன மனதினை கொன்று
பட்டினிச் சாவின் நிலத்தில்
பச்சிளங் குழந்தையின் தவிப்பை
கழுகினுக்கு இரையாம் முன்னர்
கவனமாய் படம் பிடித்திருந்தர்
செந்நிறக் கனியின் விழாவில்
சிக்கிய மங்கையைக் களிப்பில்
போதையின் மாக்கள் கொண்டாட
பொறுமையாய் படம் பிடித்திருந்தர்
கழுகினை விரட்டவும் இல்லை
காத்திடும் எண்ணமும் இல்லை
மனதின் தேடலில் இனிமேல்
மனிதமும் சேர்த்திடலாமோ?
