Apr242008
Posted by admin

புள்ள உசுர காக்கத்தானே
தடுப்பு ஊசி போட வந்தேன்..
உசுரையே கொன்னுப்போட்டா
எங்க போயி முறையிடுவேன்..
பூவப்போல சிரிச்ச புள்ள
துவண்டு மேல சரிஞ்சதய்யா..
மழலை பேசும் வாயிலெல்லாம்
நுரை ததும்பி வழிந்ததய்யா..
தத்தித்தத்தி வந்த புள்ள
தடம் புரண்டு கிடக்குதய்யா..
பெத்த மனம் தாங்கல்லியே
சொல்லிச்சொல்லி மாளலியே
என்ன சாக்கு சொல்லப்போற
யார குத்தம் சொல்லப்போற
எம் புள்ள எனக்கு வேணும்
எப்ப திருப்பித் தரப்போற..
புகைப்படம் : நன்றி தினத்தந்தி
2 responses so far
Apr232008
Posted by admin

கண்ணாடிச் சில்லுகளுடன்
சிதறிக் கிடப்பது
அவனது கனவுகளும்
அவர்களது வாழ்வின்
அஸ்திவாரமும்…
One response so far
Apr222008
Posted by admin

ஏ நிலவே..
வேடிக்கை போதும்
என் செல்ல மகள்
இப்பொழுது தான்
கண்ணயர்ந்தாள்
முகிலிடை மூழ்கிடு..
நின் ஒளிக்கரங்களால்
வருடி வருடி
அவளின் துயில்
கலைத்து விடாதே
ஆசை மிகின்
தென்றலின் துணையொடு
அவ்வப்பொழுது
முகில் விலக்கி
அவள் தூங்கும் அழகை
இரசித்துக் கொண்டிரு
என்னைப் போல்..
10 responses so far
Apr172008
Posted by admin

கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
சிதைக்கப்பட்ட இதழ்களுடன்
சாக்லேட் கண்காட்சி…
7 responses so far
Apr152008
Posted by admin

மெய்யோ பொய்யோ
அழகிய செடியின் இலைகள்
நகம் தீண்டிய தழும்பேந்தி…
****************
நண்பர்களே,
நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்….
கையலம்பும் இடமருகில்
கண்கவர் செடியொன்று
மெய்யோ என்றறிந்திடவே
இலையொன்றை ஸ்பரிசித்தேன்
பாவம் அது….
பல்வேறு நகம் தீண்டி
உடல்முழுதும் தழும்புகளாய்..
இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை.
எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.
22 responses so far
Feb292008
Posted by admin
ஓயாத வேலை
உன் பின்னே ஓட்டம்
விளையாடும் நேரமெல்லாம்
உன் வயதேதான் எனக்கும்
காலை முதல் கனவு வரை
ஏதேதோ எண்ணங்கள்
குறிஞ்சியாய் பூக்கும்
ஓரிரு கவிதைகளும்
உயிர்பிக்க முடியாமல்
ஓரத்தில் உறங்கிப்போகும்
எங்கே தொலைந்துபோனேன்??
மீண்டும் கிடைப்பேனா??
எனக்கே எனக்கான
நேரமும் கிடைக்குமா?
இன்று கிடைத்தது
நான் தேடும் என் நேரம்
அப்பொழுதும்…
உள்ளுக்குள் உறங்கும்
கவிதையை எழுப்பாமல்..
வாய் குவித்து விரல் அசைத்து
சிரித்து சிணுங்கி பதுமைபோல்
உறங்கும் கவிதையான
உன்னை இரசிக்கின்றேன்
என்னவென்று சொல்வது??
19 responses so far
Jan052008
Posted by admin

நெரிசலான மனங்களுள்
நுழைய முடியாமல்
நெடுஞ்சாலை ஓரத்தில்
பார்வையின் தூரத்தில்
பூக்களில் உறங்கும்
மௌனங்கள்
7 responses so far
Sep282007
Posted by admin
காலமகள் கொடியசைப்பில்
கடந்தது பல ஆண்டு
அன்பு நட்பு பாசம் கொண்டு
கண்ட காட்சி கேட்ட சொற்கள்
இன்றும் உண்டு நெஞ்சில் இங்கு
அன்று கண்ட மக்கள் மட்டும்
காணவில்லை மாறிப்போனார்
காலச்சுழலில் வேறு ஆனார்
மாற்றம் மட்டும் உண்மையென்றால்
அன்பும்கூட பொய்மைதானோ?
பழைய வாசம் தேடும் மனதே
புரிந்துகொள்வாய் விழித்துக்கொள்வாய்
வாழும் காலம் வேறு காலம்.
4 responses so far
Sep182007
Posted by admin
தண்ணீரில் தொலைபேசி
தரையெங்கும் காகிதங்கள்
மங்கள நீராடியதில்
மோட்சத்தில் மடிக்கணிணி
பூசைக்கு படைக்கும் பொருள்
முடியும்வரை இருப்பதில்லை
தேடும் பொருள் கிடைப்பதில்லை
போன இடம் தெரிவதில்லை
நொடிப்பொழுது அசட்டைக்கு
கைக்கூலி சேதாரம்
அத்தனையும் புலம்பலல்ல
இரசித்து சுவைத்து சிரித்தவைதான்
கவிதை எழுத உட்கார்ந்தால்
காலைக்கட்டி முகம்நோக்கி
தளர் நடையில் கிளர் மொழியில்
கொஞ்சிக் கெஞ்சி எனை அழைக்கும்
கொள்ளை கொண்ட மகள் செயல்தான்
சந்திப்போம்
கீதா
18 responses so far
Dec042006
Posted by admin
சீரிய காற்றடிக்க
சருகென உதிர்ந்த இலைகள்
ஜிவ்வென மேலெழும்பி
சிறகுடைய பறவை ஆகி
விண்ணிலே நிரம்பி நின்று
புள்ளென பயணம் செய்ய…
உதவிக்கு வந்த காற்றும்
உயரத்தில் விட்டுச் செல்ல
அசையாமல் நின்றன மரங்கள்
மழையென பொழிந்தன இலைகள்
கருத்தது மேகம் தானோ
கடல் அதில் குடிபுகுந்தானோ
வைரத்தின் வாள்தனை வீசி
படைநடுங்க கோஷங்கள் பேசி
கடலவன் இறங்கியே வந்தான்
மழையென்னும் பெயரினைக் கொண்டான்
இயற்கையின் ஜாலம் இதனை
வெறுத்திடும் மனிதரும் உண்டோ
உண்டெனக் கண்டன விழிகள்
ஆம், என் ஜன்னலுக்கு அப்பால்
4 responses so far