Jun012008
பதின்ம வயது
Posted by கீதா
இருட்டின் வெளிச்சத்தில்
தோன்றும் விண்மீனாய்
பதின்ம வயதுகளில்
பூப்பூக்கும் கனவுகள்
அழகான அலைகடலில்
ஆர்ப்பரிக்கும் பேரலையாய்
பருவச் சுரப்பி வசம்
அதிரடி ஆட்சிமாற்றம்
எதிர்பாராத் தாக்குதலால்
ஏதேதோ மாற்றங்கள்
அன்பான உறவுகளும்
அன்னியமாய்த் தெரிந்தன
அருகிருக்கும் எல்லோரும்
அறிவிலியாய்த் தோன்றினர்
அக்கறையின் அரவணைப்பும்
அணைக்கட்டாய் உறுத்தின
அறிவுரைகள் செவிகட்கே
அத்தியெனக் கசந்தன
புரிதலே இல்லையென்று
புலம்பிட வைத்தன
பெரிசுகள் தொல்லையென்று
போர்க்கொடி எழுப்பின
விரும்பின வாழ்க்கைத்தேடி
வெகுளியாய் உலகில் ஓடி
தாக்கின நிஜத்தின் வலியில்
தடைகளின் தடயம் புரிய..
அதைக் கடந்து போராடி
அனுபவத்தால் ஆளாக
நான் பட்ட இன்னல்கள்
நாள்தோறும் எனக்குச் சொல்லும்
பேருண்மை என்னவென்று
பெரியோர் சொல் வேதமென்று
………..
யான் பெற்ற துன்பங்கள்
நீ பெறவே வேண்டாமென்று
கற்று வந்த பாடங்களைக்
கனிவுடனே எடுத்துச் சொன்னால்
தலைமுறை இடைவெளியென
தள்ளியிருக்கச் சொன்னாய்
பதின்ம வயதென்றாலே
பட்டால்தான் புரியுமோ?
