Oct062006
Posted by கீதா
சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.
விளக்கம்:
தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.
One response so far
Oct062006
Posted by கீதா
எத்தனையோ மாசுகண்டும் மீண்டுமது ஓங்கிநின்றும்
அத்தனையும் தூயதாக்கி தூயவற்றை ஈன்றுநித்தம்
சித்தமலம் சேர்க்குமந்த கோபதாபம் கொன்றுவாழும்
சித்திவழி சொல்லிடுவாள் நீர்.
விளக்கம்:
நீரானது தூய்மையின் வடிவம். ஓராயிரம் முறையும் ஒரு பொருளை மாசுபடுத்தினாலும் நீர் கொண்டு கழுவினால் அந்த பொருளின் மாசு அகன்றுவிடும்.
மனிதன் தன் மனதில் சேரும் கோபம் முதலான மாசுகள் மீண்டும் மீண்டும் தம்மை தாக்கும்போது நீரைப் போல தூய்மைபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் மனம் தளரக்கூடாது.
No responses yet
Oct062006
Posted by கீதா
எத்துனைதான் வெட்டினாலும் ஆழ்குழிகள் தோண்டினாலும்
அத்துனையும் தாங்கிநின்று பேருவகை எய்திநிந்தன்
சித்தமதில் சிக்குகின்ற வேதனைகள் தாங்கிவாழும்
புத்திசொல்வாள் பூவை நிலம்.
விளக்கம்:
பூமியானது தன்னை எத்தனைதான் வெட்டினாலும், குழிகள் தோண்டினாலும் பொறுத்துக் கொள்வதோடல்லாமல் தன்னை வெட்டுபவரையும் தாங்கி பூமாதேவியென்னும் பெருமை பெற்று நிற்கும்.
அது போல மனிதன் தனக்கு நேரும் துன்பம், சோதனை ஆகியவற்றை கண்டு துவளாமல்,வேதனைப்படாமல், தன்னிலைமாறாமல் அனைத்தையும் தாங்கிக்கொண்டு, வாழும் வழி அறிந்து, வாழ்தல் வேண்டும்.
No responses yet
Oct062006
Posted by கீதா
கனவுலகில் காண்பதுவோ கற்பனைப் பூக்கள்
நனவுலகோ முட்களுடன் நித்தம் - நனவின்
மனவுலகில் மங்கையிவள் ஏற்றிடும் தீபம்
கனவென்றா கும்முன்னே காண்.
விளக்கம்:
கனவில், கற்பனையில் நாம் காண்பது இனிப்பான மனதிற்கு உவகை தரும் நிகழ்வுகளை. ஆனால் நிஜம் அதற்கு அப்பாற்பட்டது. நிஜம் எப்பொழுதும் நமக்கு பூக்களாக இருப்பதில்லை முட்களாக தைக்கவும் செய்யும்.
ஒரு மங்கை தன் கற்பனையில் தன் தலைவனுக்கு மாலை சூட்டி மகிழ்கிறாள். அந்த மகிழ்ச்சி பொய் என்று ஆகும் முன்னர் தன்னைக் காண தன் தலைவனை அழைக்கிறாள்.
கனவுலகம் - கற்பனை/கனவு
நனவுலகம் - நிஜம்
மனவுலகம் - மனதில் நினைக்கும் நினைவு
தலைவன் - இறைவன் எனவும் பொருள் படும்
2 responses so far
Mar212006
Posted by கீதா
ஜீவாவின் வெண்பா ஆர்வத்தினால் விளைந்த பயன் இது.
ஒருவழியா வெண்பாவும் தட்டிட்டு வந்தேன்
இருவிழியால் ஒப்பிட்டு பாரு - பொருந்தி
வரவேண்டும் என்றே வணங்கியே நின்றேன்
அரங்கனே உன்தாள் சரண்
கடைசி வரி நான் மாத்திட்டேன்.. வெண்பவுக்கு இன்னொரு இலக்கணமும் இருக்கு அது என்னன்னா அடிதோரும் மோனை அமைஞ்சிருக்கணும். குறைஞ்சது இரண்டு சீருக்காவது சீர்மோனை அமைஞ்சிருக்கணும். அதுதான் சரி. (சரிதானே கொஞ்சம் விசாரிச்சு பாருங்க?? )
நான் எழுதியதில் அடிதோரும் சீர்மோனை அமைந்திருக்கிறது (மற்றதெல்லாம் நீங்க சரிபார்த்து வெண்பாவா இல்லை சும்மாவான்னு சொல்லுங்க
)
வெண்பாவும் - வந்தேன்
இருவிழியால் - ஒப்பிட்டு
வரவேண்டும் - வணங்கியே
அரங்கனே - உந்தாள்
எளிதான வெண்பா இலக்கணம்
மா முன் நிரை
விளம் முன் நேர்
காய் முன் நேர்
ஒருவழியா வெண்பாவும் தட்டிட்டு வந்தேன்
நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்
கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா
(காய்-ல முடியும் சீருக்கு அடுத்த சீர் நேரசையில ஆரம்பிக்கணும்)
இருவிழியால் ஒப்பிட்டு பாரு - பொருந்தி
நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்
கருவிளங்காய் தேமாங்காய் தேமா புளிமா
(மா-ல முடியும் சீருக்கு அடுத்த சீர் நிரையில ஆரம்பிக்கணும்)
வரவேண்டும் என்றே வணங்கியே நின்றேன்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
புளிமாங்காய் தேமா கருவிளம் தேமா
(விளம்-ல முடியும் சீருக்கு அடுத்த சீர் நேர்ல ஆரம்பிக்கணும்)
அரங்கனே உன்தாள் சரண்
நிரைநிரை நேர்நேர் நிரை
கருவிளம் தேமா நிரை
அண்ணே எல்லாம் சரியா இல்லை சொதப்பிட்டனா.. ஏதோ நான் புரிஞ்சுகிட்டதை இங்க எழுதிட்டேன்.. தப்புன்னா சொல்லுங்க. திருத்திக்கிறேன்
அன்புடன்
கீதா
4 responses so far