கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

Archive for the tag 'இயற்கை'

பூக்களில் உறங்கும் மௌனங்கள் (1)

Posted by admin

சாலையோர பூக்கள்

நெரிசலான மனங்களுள்
நுழைய முடியாமல்
நெடுஞ்சாலை ஓரத்தில்
பார்வையின் தூரத்தில்
பூக்களில் உறங்கும்
மௌனங்கள்

7 responses so far

ஜன்னலுக்கு அப்பால்..

Posted by admin

சீரிய காற்றடிக்க
சருகென உதிர்ந்த இலைகள்
ஜிவ்வென மேலெழும்பி
சிறகுடைய பறவை ஆகி
விண்ணிலே நிரம்பி நின்று
புள்ளென பயணம் செய்ய…
உதவிக்கு வந்த காற்றும்
உயரத்தில் விட்டுச் செல்ல
அசையாமல் நின்றன மரங்கள்
மழையென பொழிந்தன இலைகள்

கருத்தது மேகம் தானோ
கடல் அதில் குடிபுகுந்தானோ

வைரத்தின் வாள்தனை வீசி
படைநடுங்க கோஷங்கள் பேசி
கடலவன் இறங்கியே வந்தான்
மழையென்னும் பெயரினைக் கொண்டான்

இயற்கையின் ஜாலம் இதனை
வெறுத்திடும் மனிதரும் உண்டோ
உண்டெனக் கண்டன விழிகள்
ஆம், என் ஜன்னலுக்கு அப்பால்
 

4 responses so far

கடல்

Posted by admin

கத்தும் கடல் சத்தம் அது
எட்டும் திசை எட்டும்
நித்தம் அதன் மட்டம் தனில்
யுத்தம் உயிர் யுத்தம்

விண்ணும் ஒளிக் கண்ணும் அதில்
மின்னும் அலை மின்னும்
பொன்னோ இது பொன்னோ என
எண்ணும் விழி எண்ணும்

பாடும் கடல் ஆடும் அதில்
ஓடம் ஜதி போடும்
தேடும் வலை தேடும் அதில்
வாடும் உயிர் ஓடும்

கொல்லும் பகல் கொல்லும் அதை
வெல்லும் கலம் வெல்லும்
செல்லும் அது செல்லும் மரம் (பாய்மரம்)
சொல்லும் திசை செல்லும்

காயும் பகல் சாயும் அதன்
சாயம் கடல் பாயும்
தாயின் மடி சாயும் ஒரு
சேயும் என ஆகும்

சேரும் கலம் சேரும் அவை
சேரும் இடம் சேரும்
தோறும் தினந்தோறும் அதன்
ஆடல் அரங்கேறும்

No responses yet

பாலைவனச் சோலை

Posted by admin

வீதியே வெந்திடும் வெப்பத் தணலில்
ஓரமாய் பூத்திட்ட ஒற்றைச் செடியை
நாடியே ஓடிடும் பட்டுக் குருகின்
நாட்டியம் காண்கயில்..

அன்னையின் கைதனை அன்புடன் இறுக்கி
அன்றலர்ந்த மலராய் இருவிழி விரிக்க
தத்தையென தாவிடும் குழவியின்
தளர் நடை காண்கயில்..

பல்வேறு கடமையும் கவலையும் சூழ
தாவித் தாவித் தவித்துக் கொண்டு
பாலையாய் போகும் முன்¨ர் நெஞ்சில்
சோலை மலர்கிறது

No responses yet

தூவானம்

Posted by admin

பொடிப் பொடியாய் விழும்
சர்கரைத் தூரல்

விழிவிரித்து பார்க்கயிலும்
வந்தவழி காணல்

ரோமத்தில் நீ மிதக்க
கண்ணுக்குள் ஜில்லிப்பு

நாவில் விழுந்தவுடன்
நெஞ்சுக்குள் தித்திப்பு

கையில் குடையிருந்தும்
விரிக்க மனமில்லை

நனைத்துதான் செல்லட்டுமே
தடையாயிங்கு குடையுமில்லை

No responses yet

அதிகாலை அதிசயம்

Posted by admin

அடைமழை பொழிந்ததன் சுவடு
அழகாய் தெரிந்தது இங்கு
ஆங்காங்கே திட்டுத் திட்டாய்
அதிசயத் தடாகம் பட்டாய்
குருகுகளின் குளியல் அறையோ
அவையெந்தன் விழிகட்கு இரையோ
சொட்டிய துளிகளின் சப்தம்
செவிகளை தீண்டிடும் சொர்கம்
விழித்தது செங்கதிரோனோ
விடியலின் அழகிதுதானோ
தங்கமுலாம் பூசிய இலைகள்
வெள்ளிமணி சொட்டிடும் கிளைகள்
கோர்த்திடும் எண்ணம் கண்டு
தீண்டினேன் விரல்கள் கொண்டு
உருகின விரல்களின் வழியே
சிதறின மணிகளும் தனியே
விழிகளின் சொந்தம் அழகோ?
விரல்பட அழிந்தே விடுமோ?

No responses yet

வெளிச்சத்துளி

Posted by admin

இருள் கவிந்த நள்ளிரவில்
நிலவும் உறங்கும் காரிருளிள்
மின் இணைப்பும் உறங்கிவிட
அவஸ்தையிலே விழித்து எழுந்தேன்

அந்தகனின் நிலையில் நானும்
அன்னை உடன் எழுந்து சென்று
அழகு விளக்கு ஏந்தி வந்து
அக்கறையாய் ஏற்றி வைத்தார்

பனித்துளியின் உருவம் கொண்டு
உயிர்பெற்ற வெளிச்சத் துளியின்
ஒளியெங்கும் பரவி நிற்க
உறைந்து நின்றேன் அழகினிலே

மின் இணைப்பு விழித்தவுடன்
விழித்துக் கொண்ட பேரொளியில்
துளி வெளிச்சம் மறைந்துவிட
மகிழ்ச்சி இல்லை மனதில் மட்டும்.

No responses yet