Jun012008
Posted by கீதா
இருட்டின் வெளிச்சத்தில்
தோன்றும் விண்மீனாய்
பதின்ம வயதுகளில்
பூப்பூக்கும் கனவுகள்
அழகான அலைகடலில்
ஆர்ப்பரிக்கும் பேரலையாய்
பருவச் சுரப்பி வசம்
அதிரடி ஆட்சிமாற்றம்
எதிர்பாராத் தாக்குதலால்
ஏதேதோ மாற்றங்கள்
அன்பான உறவுகளும்
அன்னியமாய்த் தெரிந்தன
அருகிருக்கும் எல்லோரும்
அறிவிலியாய்த் தோன்றினர்
அக்கறையின் அரவணைப்பும்
அணைக்கட்டாய் உறுத்தின
அறிவுரைகள் செவிகட்கே
அத்தியெனக் கசந்தன
புரிதலே இல்லையென்று
புலம்பிட வைத்தன
பெரிசுகள் தொல்லையென்று
போர்க்கொடி எழுப்பின
விரும்பின வாழ்க்கைத்தேடி
வெகுளியாய் உலகில் ஓடி
தாக்கின நிஜத்தின் வலியில்
தடைகளின் தடயம் புரிய..
அதைக் கடந்து போராடி
அனுபவத்தால் ஆளாக
நான் பட்ட இன்னல்கள்
நாள்தோறும் எனக்குச் சொல்லும்
பேருண்மை என்னவென்று
பெரியோர் சொல் வேதமென்று
………..
யான் பெற்ற துன்பங்கள்
நீ பெறவே வேண்டாமென்று
கற்று வந்த பாடங்களைக்
கனிவுடனே எடுத்துச் சொன்னால்
தலைமுறை இடைவெளியென
தள்ளியிருக்கச் சொன்னாய்
பதின்ம வயதென்றாலே
பட்டால்தான் புரியுமோ?
8 responses so far
May192008
Posted by கீதா
சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..
ரேஷன் கடை வாசல் போயி
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி
கையெல்லாம் வலிக்க வலிக்க
பிடியை இழுத்து அடித்து அடித்து
அடைப்பை எடுத்து பத்தவச்சி
இருப்புச் சட்டிய மேல வச்சி
அடுப்புச் சத்தம் காதை அடைக்க
அடுக்களையில் அருகில் இருந்து
ருசி ருசியா சமைச்சிடுவ…
கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,
தணல் அடுப்பு தந்தூரி
மின்சாரம் இயக்கும் அடுப்பு
சூரியனே சமைக்கும் அடுப்பு
அடுக்கடுக்கா அடுப்புகளும்
அடுத்த கட்டம் போயிருச்சி
அழகழகா மாறிடுச்சி
சட்டி பானை கூட்டங்கூட
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்
உன் திறமைய புதைச்சிவச்சி
உன் மகிழ்வ மறைச்சிவச்சி
அடுக்களையில் சமைச்சி சமைச்சி
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி
உன் உலகே சுருங்கிருச்சி
உன் உசுருகூட கருத்துரிச்சி..
7 responses so far
May102008
Posted by கீதா
தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
******
என்ன எழுதுவதம்மா
எதை எழுத நான்
அம்மா
என்றழைப்பதில்தான்
எத்தனை சுகமெனக்கு..
உன் புடவைத் தலைப்புக்குள்
ஒளிந்து கொண்டிருப்பேனே..
உன் மடிமீது தலைவைத்து
உறங்கிப் போவேனே..
உன் கையால் சோறுண்ண
நடுநிசியில் விழிப்பேனே..
வேலைக்கு நீ சென்றால்கூட
வாசலிலேயே படுத்திருப்பேன்
தெருமுனையில் உன்முகத்தை
காணவேண்டித் தவமிருப்பேன்..
பண்டிகையோ விடுமுறையோ
உனக்கெல்லாம் அடுப்படிதான்
உனக்கெது பிடித்தாலூம்
எனக்கு உண்ணத் தந்திடுவாய்
எனக்கொரு நோயென்றால்
ஊருக்கே தெரிந்துவிடும்
உனக்கொரு நோயென்றால்
உள்ளுக்குள் புதைத்திடுவாய்
உனக்கான துயரங்கள்
யாருக்கும் தெரிந்ததில்லை
நோயுற்ற காலத்திலும்
கடமையில் தவறியதில்லை

எனை விட்டு ஒருநாளும்
பிரிந்திருக்க மாட்டாயே
எப்படியம்மா தாங்கினாய்
பல்லாயிரம் மைல் பிரிவை..
உன்னருமை தெரியுமம்மா
பிள்ளையொன்று வந்தபின்பு
இன்னுமின்னும் புரியுதம்மா
அம்மாவாய் ஆகவேண்டி
ஈன்றால் மட்டும் போதுமா
தவம் செய்வேண்டுமம்மா
அம்மா எனும் வார்த்தைக்கு
வாழும் அர்த்தம் நீ
அம்மா.. அன்பின் உருவமே
கனிவூறும் கண்களே
உன் அறிவும் அருளும்
கருணையும் கம்பீரமும்
திடமும் தியாகமும்
சகிப்புத்தன்மையும் சாந்தமும்
பொறுப்பும் பொறுமையும்
மென்மையும் மேன்மையும்
எனக்கு வராதம்மா..
மெச்சுகிறேனம்மா…
வியக்கிறேன் உன்னைக்கண்டு..

அருமை அம்மா..
உன்னைக் கட்டிக்கொண்டு
உன்னருகில் தூங்கி
உன் முகத்தில் விழித்து
உன்னிடம் திட்டுவாங்கி
உன்னிடம் கோபித்து
உன்னுடன் விளையாடி
உன் செல்ல மகளாய்
உன்னுடனே இருக்கவேண்டும்
காத்திருக்கிறேனம்மா…
உன் மகளாய்…
*********
19 responses so far
Feb292008
Posted by கீதா
ஓயாத வேலை
உன் பின்னே ஓட்டம்
விளையாடும் நேரமெல்லாம்
உன் வயதேதான் எனக்கும்
காலை முதல் கனவு வரை
ஏதேதோ எண்ணங்கள்
குறிஞ்சியாய் பூக்கும்
ஓரிரு கவிதைகளும்
உயிர்பிக்க முடியாமல்
ஓரத்தில் உறங்கிப்போகும்
எங்கே தொலைந்துபோனேன்??
மீண்டும் கிடைப்பேனா??
எனக்கே எனக்கான
நேரமும் கிடைக்குமா?
இன்று கிடைத்தது
நான் தேடும் என் நேரம்
அப்பொழுதும்…
உள்ளுக்குள் உறங்கும்
கவிதையை எழுப்பாமல்..
வாய் குவித்து விரல் அசைத்து
சிரித்து சிணுங்கி பதுமைபோல்
உறங்கும் கவிதையான
உன்னை இரசிக்கின்றேன்
என்னவென்று சொல்வது??
12 responses so far
Jan052008
Posted by கீதா

நெரிசலான மனங்களுள்
நுழைய முடியாமல்
நெடுஞ்சாலை ஓரத்தில்
பார்வையின் தூரத்தில்
பூக்களில் உறங்கும்
மௌனங்கள்
7 responses so far
Sep282007
Posted by கீதா
காலமகள் கொடியசைப்பில்
கடந்தது பல ஆண்டு
அன்பு நட்பு பாசம் கொண்டு
கண்ட காட்சி கேட்ட சொற்கள்
இன்றும் உண்டு நெஞ்சில் இங்கு
அன்று கண்ட மக்கள் மட்டும்
காணவில்லை மாறிப்போனார்
காலச்சுழலில் வேறு ஆனார்
மாற்றம் மட்டும் உண்மையென்றால்
அன்பும்கூட பொய்மைதானோ?
பழைய வாசம் தேடும் மனதே
புரிந்துகொள்வாய் விழித்துக்கொள்வாய்
வாழும் காலம் வேறு காலம்.
4 responses so far
Oct062006
Posted by கீதா
அஷ்டமியா? - ஆகாது
தேய்பிறையா? - கூடாது
இராப்பொழுதா? - வேண்டாமே
எத்தனையோக் காரணங்கள்
தேடித்தேடி எடுத்துவந்தேன்
ஏதோ சரியில்லையென
நித்தம் பயணம் ஒத்திவைத்தேன்
உண்மையிங்கு அதுவல்ல
நிஜத்தை நம் மனமறியும்
எல்லாம் இருந்தபோதும்
பயணிக்க மனம்தான் இல்லை
No responses yet
Oct062006
Posted by கீதா
ரம்யமான இசை..
பிடித்தமான பாடல்..
கவின் சொட்டும் காட்சி..
மனம் கவர்ந்த புத்தகம்..
கண்சிமிட்டும் விண்மீன்..
வருடிச் செல்லும் காற்று..
அசைந்தாடும் இலைகள்..
சுகமான உரையாடல்..
என்று ஏதேதோ ..
மனதினுள் அடைத்தேன்..
ஆனாலும் மாற்றமில்லை
இங்கு பெருகி நிற்பது..
என் வெறுமைதான்.
One response so far
Oct062006
Posted by கீதா
எங்கிருந்து வந்தனையோ
எங்கு சென்றனையோ
தவம் செய்யவில்லை நான்
தானாக வந்தாய் நீ
வழியனுப்பவில்லை நான்
வந்தவழி சென்றாய் நீ
வந்த சில நாழிகையில்
என்வசத்தில் நானில்லை
வசவுமொழி கேட்டனரோ
வாயடைத்து நின்றனரோ?
கடும்பார்வை கண்டனரோ
கண் கலங்கிச் சென்றனரோ??
என்னை நீ ட்கொள்ள
எங்கே நான் சென்றுவிட்டேன்
என் சிரத்தில் நீயேற
உன் அடிமை ஆனேனோ?
என் உடமை நீயில்லை
என்னை நீ விட்டுவிடு
வாராமல் நீ இருந்தால்
வாயில்ல பூச்சிதான் நான்
ஆனால்..
வாழவேண்டும் நானும்தான்
என் அடிமை ஆவதென்றால்
வந்து.. கண்டு.. சென்றுவிடு
No responses yet
Oct062006
Posted by கீதா
எனக்குத் தெரிந்தவை
உனக்குத் தெரியாமலும்
எனக்குப் புரிந்தவை
உனக்குப் புரியாமலும்
எனக்குப் பிடித்தவை
உனக்குப் பிடிக்காமலும்
எனக்கு நன்மையானவை
உனக்குத் திமையாகவும்
எனக்குக் கவிதையானவை
உனக்குக் கிறுக்கலாகவும்
எப்படியும் தெரியலாம்..
எல்லாமே சாத்தியம்தான்.
ஏனென்றால்..
எனக்கு ‘நான்’ எனத்தெரிவது
உனக்கு ‘நீ’ எனத்திரிவதால்
No responses yet