Oct062006
Posted by admin
ஓயவே மாட்டேனென்று
நொடிக்கொரு முறை
சினுங்கிக் கொள்ளு(ல்லு)ம்
மொபைல் போன்கள்..
வெளி தேசத்திற்கும்
அடுத்த வீட்டிற்கும்
மேல் மாடிக்கும்
சமயத்தில்.. அருகிருந்தும்
அடையாளம் காணாதவர்க்கும்
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்குமாய்
ஓயாத அழைப்புக்கள்..
ஆனாலும் நேரமில்லை
வெகுநேரம் அருகமர்ந்து
ஆவலுடன் காத்திருக்கும்
குடும்பத்தினரிடம் பேசுதற்கு
No responses yet
Oct062006
Posted by admin
கருவான நாள்முதல்
கண்ணெனக் காத்தவள்
உருவாக்கி என்னையும்
உவகையோடு பார்த்தவள்
வலிகளை மட்டுமே
வாழ்நாளில் கண்டவள்
இத்தனைப் பெருமையும்
எந்தன் அன்னைக்கே
முதலெழுத்து சூட்டுதற்கு
தந்தை பெயர் மட்டும்
கேட்பது ஏன்?
3 responses so far
Oct062006
Posted by admin
உலகையே சுமப்பதுபோல்
பையினைத் தலையில் சுமந்தபடி
வீதிதோறும் உலவிக்கொண்டிருக்கும்
விந்தையான ஒரு பெண்மணி..
வியாழக் கிழமை தோறும்
விதிபோலத் தவறிடாமல்
‘முருகா’ என்று அழைத்தபடி
யாசகம் கேட்கும் ஒரு தாத்தா..
ஒய்ந்த கால்களின் உதவியின்றி
உடைந்து போன சக்கரங்களை
கைகளின் உதவியில் ஓட்டியபடி
ஓயாமல் பயணிக்கும் தாத்தா..
எங்கு போவர்? என்ன செய்வர்?
இவர்களின் உலகத்தில் ஒரேநாள்
சஞ்சரிக்க எனக்கும் ஆசைதான்
ஆனாலும் தடுக்கிறது என் உலகம்..
One response so far
Oct062006
Posted by admin
எறும்பு தத்துவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா?
ஒரு இடத்துல படிச்சேன்..
Ant Philosophy
1. Never Quit – Find a way or make it.
2. Think ahead – Ants think winter all summer
3. Think Positive – Ants think summer all winter
4. Do what all you can
அதை உபயோகிச்சி ஒரு சின்ன கிறுக்கல்..
எறும்பு சொல்லும் பாடம்
மேலேறி கீழிறங்கி
முன்சென்று பின்சென்று
ஏதோ ஒரு வழி தேடி
இலக்கடைவோம் வா தோழா
இன்பக்காலம் முடிந்துவிடும்
துன்பம் கையை அசைத்துவரும்
உணர்ந்ததனை எதிர்கொள்ள
வலிமைசெய்வோம் வா தோழா
இந்த காலம் கடந்துபோகும்
இனிய வாய்ப்பும் தேடிவரும்
முதல் கதிரை வரவேற்க
காத்திருப்போம் வா தோழா
வேலையென்ன அறிந்தபின்பு
கவனம் முழுதும் அதில்செலுத்தி
முடியுமட்டும் உழைத்திடுவோம்
முன்னேறிட வா தோழா
எறும்பு சொல்லும் பாடமிது
கேட்டிடுவாய் என் தோழா
இன்னும் இன்னும் தேவையெனில்
கற்றுக்கொள்ள வா தோழா..
No responses yet
Oct062006
Posted by admin
ரம்யமான இசை..
பிடித்தமான பாடல்..
கவின் சொட்டும் காட்சி..
மனம் கவர்ந்த புத்தகம்..
கண்சிமிட்டும் விண்மீன்..
வருடிச் செல்லும் காற்று..
அசைந்தாடும் இலைகள்..
சுகமான உரையாடல்..
என்று ஏதேதோ ..
மனதினுள் அடைத்தேன்..
ஆனாலும் மாற்றமில்லை
இங்கு பெருகி நிற்பது..
என் வெறுமைதான்.
One response so far
Oct062006
Posted by admin
உச்சி வெயில் வேளையிலே
செல்லும் சாலை மீதினிலே
ஒளியொன்று எழக் கண்டு
வியப்புடனே அங்கு சென்றேன்
மின்னலின் ஒளி தோற்கும்
மின்னிய பொருளைக் கண்டேன்
அழகிய பத்துக் காசு
சுடர்விடும் பத்துக் காசு
யாரதை விட்டுச் சென்றார்
யாரதை எடுத்துச் செல்வார்
எடுத்திட மனமிருந்தும்
ஏதேதோ தடுத்ததென்னை
குனிந்ததை எடுத்திட்டால்
குறும்பவர் கேலிசெய்வர்
குனிந்ததை எடுக்கலாமா
கோவிலில் சேர்க்கலாமா
அருகினில் இரப்பவர்க்கு
எடுத்ததை அளிக்கலாமா
பலவிதம் எண்ணிக்கொண்டு
பாதையைப் பார்த்த போது
கடந்தே வந்துவிட்டேன்
காசினைக் கண்ட இடத்தை
எண்ணங்கள் விடுத்து நானும்
எட்ட நடை போட்ட வேளை
விழிகளில் வந்து செல்லும்
அழகிய பத்துக் காசு.
2 responses so far
Oct062006
Posted by admin
பித்துப் பிடித்தன்ன போடி!!
பிணம் வந்துக் குவிவது கண்டு
திசை எட்டெங்கும் நீர் கண்டபோதும்
எமன் தாகமடங்கலை போடி!!!
பிஞ்சு உயிர்களைக் கொண்டான்
பல வண்ணக் கனவுகள் கொன்றான்
தாயின் கண்முன்னே சேயுயிர் தின்றான்
இன்னும் என்னென்னவோ துயர் செய்தான்
கடல் பொங்கின வேகம் கண்டாயோ?
கரை தின்றதன் சோகம் கண்டாயோ?
என்னென்று ஏதென்று சொல்வேன்
மனம் பித்துப் பிடித்தது போடி
No responses yet
Oct062006
Posted by admin
பொத்திவைத்த ஆசைகளை
இரகசியமாய் திறந்துவைத்து
உனக்கான என் அன்பை
உதிராத பாசப் பூவை
நமக்கு மட்டும் புரிந்திருக்கும்
நயன பாஷைக் கவிதைகளை
அழகாய்த் தேர்ந்தெடுத்து
அற்புதமாய்க் கோர்த்துவைத்தேன்
மடலினைக் கண்டுக் கண்டு
நாளெல்லாம் இன்பமுற்றேன்
உனக்கதை அனுப்பிட்டால்
எத்தனை நீ இன்புறுவாய்..
விழிகளின் வார்த்தையன்றி
வேறொன்றும் பேசிலோம் நாம்
வாய்ச்சொற்கள் தேவையில்லை
மனதினை மனம் அறியும்
ஆனாலும்…
சொல்லிடத் தோன்றவில்லை
இதயங்கள் கிழிபடலாம்..
அதனால்..
சொல்லிட்ட திருப்தியுடன்
மடலினை கிழித்துவிட்டேன்
இனி..
இந்த பூமியுள்ளவரை
இருவர் இதயங்களிலும்
வாழும் நம் அமரக் காதல்
No responses yet
Oct062006
Posted by admin
எங்கிருந்து வந்தனையோ
எங்கு சென்றனையோ
தவம் செய்யவில்லை நான்
தானாக வந்தாய் நீ
வழியனுப்பவில்லை நான்
வந்தவழி சென்றாய் நீ
வந்த சில நாழிகையில்
என்வசத்தில் நானில்லை
வசவுமொழி கேட்டனரோ
வாயடைத்து நின்றனரோ?
கடும்பார்வை கண்டனரோ
கண் கலங்கிச் சென்றனரோ??
என்னை நீ ட்கொள்ள
எங்கே நான் சென்றுவிட்டேன்
என் சிரத்தில் நீயேற
உன் அடிமை ஆனேனோ?
என் உடமை நீயில்லை
என்னை நீ விட்டுவிடு
வாராமல் நீ இருந்தால்
வாயில்ல பூச்சிதான் நான்
ஆனால்..
வாழவேண்டும் நானும்தான்
என் அடிமை ஆவதென்றால்
வந்து.. கண்டு.. சென்றுவிடு
One response so far
Oct062006
Posted by admin
எனக்குத் தெரிந்தவை
உனக்குத் தெரியாமலும்
எனக்குப் புரிந்தவை
உனக்குப் புரியாமலும்
எனக்குப் பிடித்தவை
உனக்குப் பிடிக்காமலும்
எனக்கு நன்மையானவை
உனக்குத் திமையாகவும்
எனக்குக் கவிதையானவை
உனக்குக் கிறுக்கலாகவும்
எப்படியும் தெரியலாம்..
எல்லாமே சாத்தியம்தான்.
ஏனென்றால்..
எனக்கு ‘நான்’ எனத்தெரிவது
உனக்கு ‘நீ’ எனத்திரிவதால்
No responses yet