May192008
Posted by கீதா
சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..
ரேஷன் கடை வாசல் போயி
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி
கையெல்லாம் வலிக்க வலிக்க
பிடியை இழுத்து அடித்து அடித்து
அடைப்பை எடுத்து பத்தவச்சி
இருப்புச் சட்டிய மேல வச்சி
அடுப்புச் சத்தம் காதை அடைக்க
அடுக்களையில் அருகில் இருந்து
ருசி ருசியா சமைச்சிடுவ…
கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,
தணல் அடுப்பு தந்தூரி
மின்சாரம் இயக்கும் அடுப்பு
சூரியனே சமைக்கும் அடுப்பு
அடுக்கடுக்கா அடுப்புகளும்
அடுத்த கட்டம் போயிருச்சி
அழகழகா மாறிடுச்சி
சட்டி பானை கூட்டங்கூட
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்
உன் திறமைய புதைச்சிவச்சி
உன் மகிழ்வ மறைச்சிவச்சி
அடுக்களையில் சமைச்சி சமைச்சி
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி
உன் உலகே சுருங்கிருச்சி
உன் உசுருகூட கருத்துரிச்சி..
7 responses so far
May132008
Posted by கீதா

நினைவஞ்சலி
எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொக்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல
விலகாமல் என்றென்றும்..
5 responses so far
May102008
Posted by கீதா
தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
******
என்ன எழுதுவதம்மா
எதை எழுத நான்
அம்மா
என்றழைப்பதில்தான்
எத்தனை சுகமெனக்கு..
உன் புடவைத் தலைப்புக்குள்
ஒளிந்து கொண்டிருப்பேனே..
உன் மடிமீது தலைவைத்து
உறங்கிப் போவேனே..
உன் கையால் சோறுண்ண
நடுநிசியில் விழிப்பேனே..
வேலைக்கு நீ சென்றால்கூட
வாசலிலேயே படுத்திருப்பேன்
தெருமுனையில் உன்முகத்தை
காணவேண்டித் தவமிருப்பேன்..
பண்டிகையோ விடுமுறையோ
உனக்கெல்லாம் அடுப்படிதான்
உனக்கெது பிடித்தாலூம்
எனக்கு உண்ணத் தந்திடுவாய்
எனக்கொரு நோயென்றால்
ஊருக்கே தெரிந்துவிடும்
உனக்கொரு நோயென்றால்
உள்ளுக்குள் புதைத்திடுவாய்
உனக்கான துயரங்கள்
யாருக்கும் தெரிந்ததில்லை
நோயுற்ற காலத்திலும்
கடமையில் தவறியதில்லை

எனை விட்டு ஒருநாளும்
பிரிந்திருக்க மாட்டாயே
எப்படியம்மா தாங்கினாய்
பல்லாயிரம் மைல் பிரிவை..
உன்னருமை தெரியுமம்மா
பிள்ளையொன்று வந்தபின்பு
இன்னுமின்னும் புரியுதம்மா
அம்மாவாய் ஆகவேண்டி
ஈன்றால் மட்டும் போதுமா
தவம் செய்வேண்டுமம்மா
அம்மா எனும் வார்த்தைக்கு
வாழும் அர்த்தம் நீ
அம்மா.. அன்பின் உருவமே
கனிவூறும் கண்களே
உன் அறிவும் அருளும்
கருணையும் கம்பீரமும்
திடமும் தியாகமும்
சகிப்புத்தன்மையும் சாந்தமும்
பொறுப்பும் பொறுமையும்
மென்மையும் மேன்மையும்
எனக்கு வராதம்மா..
மெச்சுகிறேனம்மா…
வியக்கிறேன் உன்னைக்கண்டு..

அருமை அம்மா..
உன்னைக் கட்டிக்கொண்டு
உன்னருகில் தூங்கி
உன் முகத்தில் விழித்து
உன்னிடம் திட்டுவாங்கி
உன்னிடம் கோபித்து
உன்னுடன் விளையாடி
உன் செல்ல மகளாய்
உன்னுடனே இருக்கவேண்டும்
காத்திருக்கிறேனம்மா…
உன் மகளாய்…
*********
19 responses so far
May022008
Posted by கீதா

சமையல் குறிப்புக்கு சன்னதி நீ
சமயத்தில் பாதைக்கு வழிகாட்டி நீ
புரியாத வார்த்தைக்கு அகராதி நீ
தெரியாத விபரங்கள் தெரிவிப்பாய் நீ
அறியாத ஊருக்கு அட்லசும் நீ
படிக்காத பாஷைக்கு பண்டிதனும் நீ
தளங்களின் புள்ளியியல் நிபுணரும் நீ
மறுமொழி மயக்கத்தின் மாயமும் நீ
உலகிய நட்பினுக்கு வாசலும் நீ
வாசல்வெளி நட்புக்கு தாழ்ப்பாளும் நீ
காதலுக்கு தூதாகச் செல்பவனும் நீ
சாதலுக்கும் பலவழிகள் சொல்பவனும் நீ
அயல்நாட்டில் அன்னைமுகம் காட்டுபவன் நீ
அருகேயே இருப்போரை மறைப்பவனும் நீ
ஊருலக செய்தியெல்லாம் சொல்பவனும் நீ
உள்ளறையில் நிகழுவதை ஒளிப்பவனும் நீ
உலகினையே வீட்டுக்குள் விரித்தவனும் நீ
உனக்குள்ளே என்னுலகை முடக்கியதும் நீ
ஆண்டவன் புகழை அனைவரும் பாட வாரீர்!!!
7 responses so far
May012008
Posted by கீதா

திருவள்ளூர் 4
திண்டுக்கல் 1
உத்திரபிரதேசம் 2
தர்மபுரி 1
நெல்லை 1
காட்டுமன்னார்கோயில் 1
முடிந்ததா? தொடருமா?
பிஞ்சு உயிரென்ன
துச்சமா உமக்கு
உம்வீட்டில் நிகழ்ந்தால்
உச்சுகொட்டி நிற்பீரா?
கெஞ்சமாட்டீர்
கதறமாட்டீர்
தடுப்பூசி மருந்தினை
தடைசெய்யமாட்டீர்
ஏன் தாமதம்??
போனது யாரோதானே
பிரியாவும் பூஜாவும்
உமக்கென்ன வேண்டும்?
அரசன் மகளென்ன
ஆண்டி மகளென்ன
உயிர் ஒன்றுதானே
பாசம் ஒன்றுதானே
வலி ஒன்றுதானே
புரியாதா உமக்கு?
தடுப்பூசி எதற்காக?
நோய் தடுக்கத்தானே?
ஊசியே உயிர் குடித்தால்
தவறெங்கே இருக்கிறது?
மருந்திலா? உடம்பிலா?
சல்லிசாய் வாங்கி
சும்மாய் கொடுத்தீர்
சுலபமாய்ப் போனது
பிஞ்சு உயிர்..
போதும் கொடுமைகள்
முற்றுப்புள்ளி வை
உயிர்களை மதி
நேர்மையாய் செயல்படு
மருந்தினை தடைசெய்
யாராயிருந்தாலும்
உயிர் ஒன்றுதான்
இன்று அவர்கள்
நாளை…
4 responses so far
Apr262008
Posted by கீதா

நீ வழக்கமாக ஒளியுமிடம்
தெரியாதா எனக்கு??
ஆனாலும்…
வீடு முழுதும்
தேடி அலைவேன்..
‘த்த்தோ நிமி’
என்று தலைக்காட்டி
நீ சிரிக்கும்
அழகில் கரைய..
oOo
சும்மாவேனும்
கையில் முகம்புதைத்து
அழுதுகொண்டிருப்பேன்
‘அம்மா’ என்றணைத்தபடி
என் முகம்நோக்கும்
உன் அழகுவிழிகளின்
அன்பொளியில் நனைய..
One response so far
Apr232008
Posted by கீதா

கண்ணாடிச் சில்லுகளுடன்
சிதறிக் கிடப்பது
அவனது கனவுகளும்
அவர்களது வாழ்வின்
அஸ்திவாரமும்…
No responses yet
Apr222008
Posted by கீதா

ஏ நிலவே..
வேடிக்கை போதும்
என் செல்ல மகள்
இப்பொழுது தான்
கண்ணயர்ந்தாள்
முகிலிடை மூழ்கிடு..
நின் ஒளிக்கரங்களால்
வருடி வருடி
அவளின் துயில்
கலைத்து விடாதே
ஆசை மிகின்
தென்றலின் துணையொடு
அவ்வப்பொழுது
முகில் விலக்கி
அவள் தூங்கும் அழகை
இரசித்துக் கொண்டிரு
என்னைப் போல்..
8 responses so far
Apr172008
Posted by கீதா

கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
சிதைக்கப்பட்ட இதழ்களுடன்
சாக்லேட் கண்காட்சி…
6 responses so far
Apr152008
Posted by கீதா

மெய்யோ பொய்யோ
அழகிய செடியின் இலைகள்
நகம் தீண்டிய தழும்பேந்தி…
****************
நண்பர்களே,
நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்….
கையலம்பும் இடமருகில்
கண்கவர் செடியொன்று
மெய்யோ என்றறிந்திடவே
இலையொன்றை ஸ்பரிசித்தேன்
பாவம் அது….
பல்வேறு நகம் தீண்டி
உடல்முழுதும் தழும்புகளாய்..
இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை.
எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.
22 responses so far