என்றோ ஒருநாள் ஏதோவொரு காகிதத்தில் அவசரமாக கிறுக்கிவைத்த நண்பனின் தொலைபேசியெண் காணக்கிடைத்தது இன்று காலங்களை வென்று கண்ணீர் பரிசென தந்து.. தொலைபேசி இருக்கலாம் பேசியவன் தொலைந்துவிட்டான் காற்றினில் கலந்துவிட்டான் எண்களைச் சுழற்றுகின்றேன்.. எண்ணியது நடக்குமா? எடுத்து அவன் பேசுவானா? செவிகள் இன்னும் மறக்கவில்லை சென்றவனின் குரல் ஒலியை தொலைந்த அவன் உடலினைப்போல் அவன் குரலும் தொலைந்ததுவோ
Month: October 2006
மனதின் கதை..
கையில் கிடைக்காத மனதின் கதை கேட்டேன் கற்பனை ஆனாலும் கதையில் சுவையுண்டு பிரம்மன் படைத்திட்டான் புவியில் மனித இனம் மறைந்தே இருப்பதுதான் மனதின் பெருமையென்று தேடி அலைந்திட்டான் அவனின் மனதுக்கிடம் புவியில் புதைத்திட்டால் குடைந்தே எடுத்திடுவான் வெளியில் மறைத்திட்டால் பறந்தே பிடித்திடுவான் எவ்விதம் வைப்பதென யோசனை மிகக்கொண்டான் கண்டான் சிறந்த இடம் மனிதன் உடலே அ·து எங்கும் தேடும் மனிதன் தன்னுள் தேட மாட்டான் தேடத் துவங்கும் அந்நாள் வாழ்வின் அர்த்தம் புரியும் கதையும் முடிந்தது அங்கே …
நானும் நிழலும்
நிழலை பிடிக்கவேண்டி நானதைத் தொடர்ந்திட்டேன் தொடர்ந்தே நானும் செல்ல நிழலும் விலகக் கொள்ள ஆட்டம் தொடங்கியது எனக்கும் நிழலுக்குமாய் இடமும் வலமுமாக முன்னும் பின்னுமாக மேலும் கீழுமாக விலகி நழுவியது அதனை நானும் கண்டேன் பல்வேறு வடிவினிலே நெடிதும் சிறியதுமாய் சில நொடி மாயமாய் பிடிக்க இயலவில்லை சோர்ந்தே நானமர்ந்தேன் அருகே நிழலும் கண்டு உணர்ந்தேன் அந்நொடியே நானும் நிழலும் ஒன்று இறைவனும் அப்படித்தானோ?
காதலிசம்
எல்லோரும் சொல்கிறார்கள்.. நொடிப்பொழுதும் உன்னை மறவாத என் மனதுக்கு மறதி வந்துவிட்டதுவாம்.. கணம்தோறும் உன்குரலில் மூழ்கும் என் செவிக்கு கேட்கும் சக்தி இல்லையாம் நாள்தேறும் உன்னுருவம் காணும் என் விழிகள் பார்வை இழந்துவிட்டதுவாம் இவையெல்லாம் உண்மைதானோ? கண் எதிரில் தோன்றும் காட்சி கருத்தினில் பதிவதில்லை காதினிலே விழும் வார்த்தை என்னவென்று விளங்கவில்லை என்ன நான் செய்தேனென்று எனக்கே புரிவதில்லை.. பிறகு.. அவர்கள் சொன்னது உண்மைதானோ?
காதலிசம்
படிக்கும் முன் ஒரு முறை நுகர்ந்து பார்க்கத் தூண்டும் புத்தம் புதிய புத்தகத்தின் வாசமும்.. வீதியில் போகயிலும் நின்று நாசி வரை நுழைந்து செல்லும் அரைபடும் காப்பிக் கொட்டையின் வாசமும்.. வரண்டு போன பூமியில் இயற்கை அன்னை கருணை மழை தூரி கிளப்பி விட்டுச் செல்லும் மண் வாசமும்.. இவை எல்லாமும் கொடுக்கும் சந்தோஷம் ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது உன் பெயரை (சு)வாசிக்கும் ஒவ்வொரு முறையும்
காத்திருத்தல்..2
காதலில்.. காத்திருத்தல் சுகம் என்று யார் சொன்னது? காத்திருந்து காத்திருந்து மொழி மறந்து போனவனின் உளரலாய் இருக்கும். காத்திருத்தல்… நிமிடங்களை நீளச்செய்யும் விஞ்ஞான அதிசயத்தை வெகு சாதாரணமாய் நிகழ்த்திக் கொண்டிருக்கும் மவுன ராட்சசன் (இது மீள்பதிவு)
காத்திருத்தல்-1
முதல்முறையா என்ன மணிக்கணக்கில் நிமிடங்களை எண்ணியபடி செவிகளை தீட்டியபடி தொலைபேசியை பார்த்தபடி உனக்காக காத்திருப்பது ஆனாலும் கூட காத்திருத்தலின் அவஸ்த்தை காலத்தின் உறைநிலை மனதின் தேடல் எதுவுமே பழையதில்லை அன்றலர்ந்த மலராய் அனுதினமும் எனக்காய்
நினைவுச் சுரங்கம்
நட்பின் கையொப்பம் தாங்கிய விலை மதிப்பிலாத ரூபாய் நோட்டு பரிசென வந்து பாடம்செய்யப்பட்ட பூக்களின் காய்ந்த துணுக்குகள் வகுப்புநேரத் தூதனாய் ஆக்கப்பட்ட நினைவுகள் தாங்கிய ஆஜர்த்தாள் தளிர் கரத்தால் எழுதிக்கொடுத்த அக்கா மகளின் அழகுக்கிறுக்கல் வீதியிலே கண்டெடுத்த காகிதம் கசங்கியும் கம்பீரமாய் பாரதி அன்பாய் அண்ணன் அனுப்பிய சாக்லெட்டின் மிஞ்சிய போர்வை புத்தகம் அனுப்புமாறு வேண்டி ஆசிரியர் அனுப்பிய அஞ்சலட்டை நட்பிற்கு அனுப்பிய பரிசினை கொண்டுசேர்த்தமைக்கான இரசீது சுதந்திர தினம்தோறும் பிரியமாய் சேகரித்துவைத்த தேசியக்கொடிகள் தொலைத்துவிட்ட தோழி …
அதிகாலை அதிசயம்
அடைமழை பொழிந்ததன் சுவடு அழகாய் தெரிந்தது இங்கு ஆங்காங்கே திட்டுத் திட்டாய் அதிசயத் தடாகம் பட்டாய் குருகுகளின் குளியல் அறையோ அவையெந்தன் விழிகட்கு இரையோ சொட்டிய துளிகளின் சப்தம் செவிகளை தீண்டிடும் சொர்கம் விழித்தது செங்கதிரோனோ விடியலின் அழகிதுதானோ தங்கமுலாம் பூசிய இலைகள் வெள்ளிமணி சொட்டிடும் கிளைகள் கோர்த்திடும் எண்ணம் கண்டு தீண்டினேன் விரல்கள் கொண்டு உருகின விரல்களின் வழியே சிதறின மணிகளும் தனியே விழிகளின் சொந்தம் அழகோ? விரல்பட அழிந்தே விடுமோ?
தொலைந்த கனவு
விளையாட்டாய்க் கோவில் கட்டி வீடுதோரும் அறிக்கை ஒட்டி பொத்தி பொத்தி சேர்த்த காசில் பொங்க வைத்தோம் ஆண்டு தோரும் எனக்கென ஒரு கூட்டம் எதிரணியும் ஒரு கூட்டம் இருவேறு முகிற்குழாமாய் இடியுடனே வாழ்ந்துவந்தோம் ஏரியில் மீன் பிடித்து கேணியில் துளையவிட்டு உச்சி வெயில் காயும்நேரம் சூழ்ந்து நின்று ரசித்திருந்தோம் வாதாம் மரத்தில் ஏறி வாகாய் ஊஞ்சல் கட்டி கேளிக்கைப் போட்டிவைத்து கொட்டைகளைப் பரிசளித்தோம் கோவிலும் காணவில்லை பூசையும் நடப்பதில்லை மரமும் மாறிப்போச்சு மதிலும் வீடுமாச்சு தனியொரு முகிலாய் …