நான் வளர்கிறேனே அம்மா

அ) கவிதைகள்

தண்ணீரில் தொலைபேசி
தரையெங்கும் காகிதங்கள்
மங்கள நீராடியதில்
மோட்சத்தில் மடிக்கணிணி
பூசைக்கு படைக்கும் பொருள்
முடியும்வரை இருப்பதில்லை
தேடும் பொருள் கிடைப்பதில்லை
போன இடம் தெரிவதில்லை
நொடிப்பொழுது அசட்டைக்கு
கைக்கூலி சேதாரம்
அத்தனையும் புலம்பலல்ல
இரசித்து சுவைத்து சிரித்தவைதான்
கவிதை எழுத உட்கார்ந்தால்
காலைக்கட்டி முகம்நோக்கி
தளர் நடையில் கிளர் மொழியில்
கொஞ்சிக் கெஞ்சி எனை அழைக்கும்
கொள்ளை கொண்ட மகள் செயல்தான்

சந்திப்போம்
கீதா

19 thoughts on “நான் வளர்கிறேனே அம்மா”

  1. அழகான கவிதை ‍
    மழலை மாறாக் குழந்தைகளின் சிறு சிறு செயல்களும் இன்பமூட்டுபவையே
    அதிலும் பெண் குழந்தைகளா
    கேட்கவே வேண்டாம்
    இன்பத்தின் எல்லை காண்பதற்கு

    தேடும் பொருள் கிடைப்பதில்லை
    போன இடம் தெரிவதில்லை
    நொடிப்பொழுது அசட்டைக்கு
    கைக்கூலி சேதாரம்

    ரசித்தேன் சிரித்தேன் மகிழ்ந்தேன்

  2. “யார் வீட்ல..?” கேட்கும்முன்
    குரலைத் தாழ்த்துங்கள்..
    காலிங்பெல்லோ, கதவுத்தட்டலோ
    யோசித்து பின் மெதுவாய் எழுப்புங்கள்..!
    நீங்கள் செல்லும் எந்த வீட்டிலும் ஒரு குழந்தை உறங்கிக்கொண்டிருக்கலாம்..
    ——–அ.வெண்ணிலா..

    பொழிகிறது மழை..
    கை நீட்டியபடி மழலை..
    எந்த துளிக்கு வாய்க்கும் அந்த பாக்கியம்..!
    ——— எங்கோ படித்தது.

    குழந்தைகள் மட்டுமல்ல.. அவர்கள் பற்றிய பேச்சும் எழுத்தும் கூட எப்போதும் அலுக்காதவை.

  3. கவிதை மிக அழகு. ஆனால் மிகக் குறுகத் தரித்த குறள் போல் தோன்றுகிறது. கொஞ்சம் அறிமுக வரிகள் இருந்து இருந்தால் கவிதை இன்னும் பலருக்குப் புரியும் வகையில் இருந்திருக்குமோ?

    ஆழியூரான் பதித்த கவிதைகளும் அருமை. யார் அந்த அ.வெண்ணிலா? தேட வேண்டும்.

  4. குறும்புகளால் உன்னைக்
    குதூகலிக்கச் செய்கிறாளா
    என் மருமகள்?

    கவிதையின் இலக்கணங்களுள்
    இது ஒரு புது வகை!

    குறுத்துக்களால்
    படைக்கப் படும்
    குறும்புக் கவிதைகள்!

    குறுங்கவிதைகளும் கூட!
    குறும்புகள் ஒவ்வொன்றும்!

    🙂

  5. ‘பின்னூட்டம் எழுத நினைத்திருந்தோமே, எங்கே போய்விட்டது அந்த அற்புதமான கவிதை?’ என்று இத்தனை நாளாய்த் தேடிக் கொண்டிருந்தேன். இன்று கிடைத்து விட்டது. கவிதையா இது? வாழ்வின் சத்திய தரிசன துண்டுப் பகுதி. இதைப் படித்த நாள் முதலாய் என் குழந்தையை அடிக்கவே முடியவில்லை. பதிவினை எடுத்து வைத்திருக்கிறேன், எது அவனை அடிகளில் இருந்து காப்பாற்றியது என்று அவன் பெரியவனானதும் காட்ட. அவன் உடைத்திருக்கும் கேமராவையும், கணினி ஒலிபெருக்கியையும், கேசட்டுகளையும், தொலைக்காட்சி தொலைஇயக்கிகளையும், இன்னபிற ஐட்டங்களையும் உங்களிடம் காட்டி நியாயம் கேட்கும் வகை அறிகிலேன்.

    RATHNESH

  6. அன்பு நண்பர்களே

    உங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    இரசித்தமைக்கு நன்றி சீனா

    ஆழியூரான்,
    அந்த இரண்டாவது கவிதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. யார் எழுதியதென்று தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்

    சதீஷ்,
    அறிமுக வரிகள் என்று எதை சொல்கிறீர்கள். புரியவில்லை..

    இப்படி ஆரம்பித்து இப்படி முடிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு எதுவும் எண்ணம் இல்லை… மனதில் வந்த வார்த்தைகளை கோர்த்து வைத்தேன் அவ்வளவே.

    பாலா
    நான் வளர வேண்டியது கவிதை எழுதுவதிலா

    கவிதையான கருத்துக்கு நன்றி சிபி

    ரத்நேஷ்
    நன்றிகள் பல. பூச்சரமாய் பின்னிய வார்த்தைகளை என் கவிதைக்கான மரியாதை மாலையாக எண்ணி மகிழ்கிறேன்.

    அன்புடன்
    கீதா

  7. வருடங்கள் ஆகிவிட்டனவா
    வலைபக்கம் வந்து?!
    வளரும் குழந்தையும் தளிர் நடையும்
    கிளர்ந்து எழுத சொன்னதா
    என்ன சொல்கிறாள் என் மருமகள்
    சின்ன சேதியும்
    மாமனுக்கு வைத்திருப்பாளே!

    அன்பில் என்றும்
    சிங்காரகுமரன்

  8. குழந்தை அழுகிறது கொசுக்கடியால்..
    தாய் எழுகிறாள் அதன் கொலுசொலியால்..

    -அண்மையில் சூரியன் எஃப்.எம்.மில் கேட்டது.

  9. ஆழியூரானின் ரசிப்புத் தன்மை பாராட்டத்தக்கது

  10. நெடுநாள் கழித்து ஒரு நல்ல, எளிமையான சொற்களால் தொடுக்கப்பட்ட கவிதை படித்த நிறைவு ஏற்பட்டது.
    உங்களால் முடியும் போதெல்லாம் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

  11. எளிய வார்த்தைகளில் நன்றாக இருக்கிறது கவிதை..
    குழந்தைகளும் கவிதைகள் தாமே..

  12. // தேடும் பொருள் கிடைப்பதில்லை
    போன இடம் தெரிவதில்லை
    நொடிப்பொழுது அசட்டைக்கு
    கைக்கூலி சேதாரம் //

    Superb!!

  13. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பர்களே!!

    அன்புடன்
    கீதா

Leave a Reply to bala Cancel reply

Your email address will not be published. Required fields are marked *