மரணம் (25-01-03)

அ) கவிதைகள்

மரணம்
விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில்
துக்கங்கள் தொடுவதில்லை
தூக்கமும் கலைவதில்லை
துடிக்க மறுத்த இதயத்தால்
துடித்ததென்னவோ நாங்கள் தான்

மரணம்
மறுக்க இயலாத மலர்மாலை
வேண்டிச் நின்றால் வருவதில்லை
வந்தபின்னர் செல்வதில்லை
தேடிச்சென்றால் பெருமையில்லை
தேடிவந்தால் வரவேற்புமில்லை

மரணம்
சலனம் இல்லாத சாந்தநிலை
இன்ப துன்பம் தெரிவதில்லை
இழப்பும் உனக்கு புரிவதில்லை
மண்ணில் வாழும் காலம் முடிய
மனிதம் அற்றுபோகும் நிலை

மரணம்
மாற்ற முடியாத மாற்றுச் சட்டை
மனித உடல் தேவையில்லை
மண்ணில் இனி வாழ்வதற்கு
மாற்றுச்சட்டை அணிந்தபின்னர்
மீண்டும் மாற்ற முடிவதில்லை

மரணம்
அழைப்பின்றி வரும் விருந்தாளி
வரும் நேரம் தெரிவதில்லை
வந்த கோலம் புரிவதில்லை
போகச் சொல்ல முடிவதில்லை
போன உயிரும் மீள்வதில்லை

மரணம்
மரித்துப் போவதில்லை
மலரின் மரணம்.. கனியின் ஆரம்பம்
அச்சத்தின் மரணம்.. வெற்றியின்ஆரம்பம்
இருட்டின் மரணம்.. வெளிச்சத்தின்ஆரம்பம்
மரணம்
மரிப்பதில்லை நினைவுகள்
மறக்கவில்லை உறவுகள்
முடியவில்லை வார்த்தைகள்
முடிவில்லாத கனவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *